இலங்கையில் மின்சார நுகர்வோருக்குப் பாரிய சுமையை ஏற்படுத்தும் வகையில், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்காக மின்சாரக் கட்டணத்தை மேலும் 15% அதிகரிக்குமாறு முன்மொழியப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தக் காலப்பகுதிக்காக நடைமுறைக்கு வந்துள்ள 10% கட்டண உயர்வுக்கு மேலதிகமாகவே இந்த புதிய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட எரிபொருள் விலைகள், டீசல் விலையேற்றம் மற்றும் மின்சார உற்பத்தித் திட்டங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இந்தத் தீர்மானத்திற்கு முக்கிய காரணங்களாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய மின்சார அமைப்பு சமர்ப்பித்துள்ள அறிக்கையின்படி, சோபாதனவி மின் நிலையம் மற்றும் களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையம் (KCCP 2) என்பன திட்டமிட்டபடி இயங்கி வரும் போதிலும், நாப்தா பயன்பாடு மற்றும் எரிபொருள் விலை மாற்றங்கள் மொத்தச் செலவினங்களைப் பாதித்துள்ளன. 2026 இரண்டாம் காலாண்டிற்கான மொத்த மின்சார உற்பத்திச் செலவு 111,450 மில்லியன் ரூபாவாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது பெப்ரவரி மாதம் கணிக்கப்பட்ட தொகையை விட கணிசமான உயர்வாகும். பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு இந்தக் கோரிக்கையை ஆய்வு செய்த பின்னரே இறுதிக்கட்டத் தீர்மானம் எடுக்கப்படும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக