திருகோணமலை சோமாவதிய வனப்பகுதிக்குட்பட்ட மஹாவலி ஆற்றில் புத்தாண்டு தினத்தில் ஏற்பட்ட துயர சம்பவத்தில், தந்தையை காப்பாற்ற முயன்ற மூன்று மகன்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். ஏப்ரல் 14ஆம் திகதி மாலை குடும்பத்துடன் ஆற்றில் நீராடச் சென்றிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
தந்தை நீரில் மூழ்கியதை கண்டு அவரை காப்பாற்ற முயன்ற நான்கு மகன்களில் ஒருவர் மற்றும் தந்தை உயிர் தப்பிய நிலையில், மற்ற மூன்று மகன்கள் ஆற்றின் ஆழத்தில் சிக்கி காணாமல் போயிருந்தனர். பின்னர் நடைபெற்ற தேடுதல் நடவடிக்கையில் அவர்களின் சடலங்கள் நேற்று பிற்பகல் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் தொழிலுக்காக இருந்த மகன்கள் புத்தாண்டுக்காக சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில் ஏற்பட்ட இந்த துயர சம்பவம் பிரதேசத்தை முழுவதும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மீட்பு நடவடிக்கைகளில் சிரமங்கள் இருந்ததாகவும், சம்பவ இடம் மிகவும் ஆபத்தான பகுதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக