நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பயன்படுத்தி நிலக்கரி கொள்வனவு தொடர்பான குற்றச்சாட்டுகளில் ஈடுபட்ட அமைச்சரை அரசாங்கம் பாதுகாத்தாலும், சம்பந்தப்பட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துவோம் என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி மீது முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், இது இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய மோசடிகளில் ஒன்றாகும் எனக் குறிப்பிட்டார். குறைந்த தர நிலக்கரி கொள்வனவால் நாட்டுக்கு சுமார் 22 பில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இது அரச கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த மோசடிக்கு ஒரு அமைச்சர் மட்டுமல்லாது, ஜனாதிபதி உள்ளிட்ட முழு அமைச்சரவை பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், சட்ட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், ஊழலில் ஈடுபட்டவர்கள் எவரும் சட்டத்திலிருந்து தப்ப முடியாது எனவும் முஜிபுர் ரஹ்மான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக