சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் பொலிஸ் திணைக்களத்தின் கௌரவத்தைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய விசேட அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். இதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அன்பளிப்புகளை வழங்குவதோ அல்லது அவற்றை அதிகாரிகள் ஏற்றுக்கொள்வதோ முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காகப் பொலிஸ் உத்தியோகத்தர்களிடம் பணம் வசூலிப்பதோ அல்லது வர்த்தக சமூகத்தினரிடம் நிதியுதவி கோருவதோ முறையற்ற செயல் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளித்தரப்பினரின் பங்களிப்புடன் பொலிஸ் நிலையங்களில் விழாக்களை நடத்துவதைத் தவிர்க்குமாறு கூறியுள்ள அவர், புத்தாண்டு உபசரிப்புச் செலவுகளுக்காக ஒவ்வொரு பொலிஸ் உத்தியோகத்தருக்கும் தலா 250 ரூபாய் வீதம் பொலிஸ் வெகுமதி நிதியிலிருந்து வழங்க அனுமதி அளித்துள்ளார். இந்த உத்தரவுகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பண்டிகைக் காலங்களில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைது செய்ய விசேட சோதனைகள் நடத்தப்படும் என்றும், சிறு விபத்துகள் ஏற்பட்டாலும் ஓட்டுநர்கள் போதைப்பொருள் சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக