மஹியங்கனை - பொலன்னறுவை பிரதான வீதியின் ஹொபரியாவ சந்திக்கு அருகில் கடந்த 7ஆம் திகதி மாலை 6 மணியளவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகக் கிரந்துருகோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் தெஹியத்தகண்டிய, சந்தனகம பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய தேவிந்த பிரபாஷ்வர மற்றும் 21 வயதுடைய கௌஷிக மனோஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
நெருங்கிய நண்பர்களான இவ்விருவரும் நுவரெலியாவிற்குச் சுற்றுலா சென்றுவிட்டு, மீண்டும் தமது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. மோட்டார் சைக்கிள் அதிக வேகத்தினால் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரமொன்றில் பலமாக மோதியதே விபத்திற்குக் காரணம் என ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். சுற்றுலா சென்று மகிழ்ச்சியாகத் திரும்பிய இளைஞர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அவர்களது கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக