பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு ஏற்படும் எரிவாயு தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில், இன்று (08.04.2026) முதல் தனது வாடிக்கையாளர்களுக்கு லாப்ஸ் எரிவாயுவை தடையின்றி விநியோகிக்கவுள்ளதாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வர்த்தக அமைச்சரின் விசேட அறிவுறுத்தல்களுக்கு இணங்க, தட்டுப்பாடின்றி விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் குறித்து நிறுவனத்திற்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன் ஒரு கட்டமாக, சுமார் 7,000 மெட்ரிக் டன் லாப்ஸ் எரிவாயுவை ஏற்றி வந்த கப்பல் கடந்த 6 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. தற்போது அந்த எரிவாயு இருப்புக்கள் தரையிறக்கப்பட்டு விநியோகத்திற்காகத் தயார்படுத்தப்பட்டுள்ளதால், இன்று முதல் நாடு முழுவதும் உள்ள முகவர்களினூடாக வாடிக்கையாளர்கள் தடையின்றி எரிவாயுவைப் பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை, பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்தல் அல்லது பதுக்கல் போன்ற முறைகேடுகளைத் தடுக்க நாடு தழுவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள் ஆணைக்குழுவின் இயக்குநர் அசெல பண்டார எச்சரித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக