பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (08.04.2026) நடைபெற்ற பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சு சார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சிவில் நிர்வாகம் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் வடக்கில் சுமார் 1,000 ஏக்கர் தனியார் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எஞ்சியுள்ள காணிகளையும் முறைப்படியாக விடுவிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார். அத்துடன், நீண்டகாலமாக மூடப்பட்டிருக்கும் வீதிப் பகுதிகளைத் திறப்பதில் உள்ள சிக்கல்களுக்குச் சாதகமான தீர்வுகளை வழங்குமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
இக்கூட்டத்தில் வழிபாட்டுத் தலங்களுக்குரிய காணிப் பிரச்சினைகள், டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளைப் புனரமைத்தல் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்வை உறுதிப்படுத்தும் அதேவேளை, கைத்தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காகக் காணிகளை முறையாக முகாமைத்துவம் செய்வதே அரசாங்கத்தின் இலக்கு என அவர் குறிப்பிட்டார். இச்சந்திப்பில் அமைச்சர்கள், முப்படைத் தளபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தமது ஆலோசனைகளை வழங்கினர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக