சூரியனின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் 05ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்கை நிலப்பரப்பிற்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக, இன்று நண்பகல் 12:13 மணிக்கு தெஹிவளை, மகரகம, பன்னிப்பிட்டிய, பாதுக்க, எஹெலியகொட, மஸ்கெலிய மற்றும் பொத்துவில் உள்ளிட்ட பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் மொனராகலை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் சாதாரணமாகக் காணப்படும் அளவை விட அதிகமாக இருக்கும்.
உயர் வெப்பநிலை நிலவுவதால், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் (Hydrated) வைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முடிந்தவரை நிழலான இடங்களில் தங்கியிருக்கவும், வெள்ளை அல்லது வெளிர் நிறத்திலான இலகுவான ஆடைகளை அணியுமாறும், கடினமான உடல் உழைப்பைக் குறைத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் மீது விசேட கவனம் செலுத்த வேண்டியது அவசியம் எனச் சுகாதாரப் பிரிவினர் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக