நுவரெலியா - தவலந்தனை நோக்கி அதிகாலை 1:00 மணியளவில் பயணித்த வேன் ஒன்று, ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் வீதியை விட்டு விலகி சுமார் 120 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் வேன் நசுங்கியதில் சிறுவனின் பெற்றோர் மற்றும் சகோதரி உள்ளேயே சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தனர். அப்போது வேனில் இருந்து தூக்கி வீசப்பட்ட 12 வயது சிறுவன் ஹிரனித சமரகோன், தானும் காயமடைந்திருந்த போதிலும் மனம் தளராமல், "அம்மா, அப்பா கவலைப்படாதீர்கள், நான் உங்களைக் காப்பாற்றுவேன்" என தைரியம் கூறிவிட்டு மீட்புப் பணியில் இறங்கியுள்ளார்.
கடும் இருள் மற்றும் 120 அடி ஆழமான பள்ளத்தாக்கு என்பதையும் பொருட்படுத்தாமல், அங்கிருந்த மரங்களையும் கற்களையும் பற்றிக்கொண்டு தவழ்ந்து வீதிக்கு வந்துள்ளார். நள்ளிரவு நேரம் என்பதால் பல வாகனங்கள் நிறுத்தாமல் சென்றபோதிலும், விடாமுயற்சியுடன் ஒரு சிறிய ரக லொறியை நிறுத்தி விபத்து குறித்து விளக்கியுள்ளார். அந்த லொறி சாரதி மற்றும் உதவியாளர்களின் துரித செயல்பாட்டினால் கொத்மலை பொலிஸார் மற்றும் வைத்தியசாலைக்குத் தகவல் வழங்கப்பட்டு, பள்ளத்தில் சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். கொத்மலை காமினி திசாநாயக்க தேசிய பாடசாலையில் 6ஆம் தரம் பயிலும் இந்தச் சிறுவனின் துணிகரச் செயலை இப்பகுதி மக்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக