இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு புதிய மைல்கல்லாகக் கருதப்படும் தேசிய QR கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பது குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வங்கிப் பிரதானிகளுடன் விரிவாகக் கலந்துரையாடினார். பணப் புழக்கத்தைக் குறைத்து, டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களைப் பொதுமக்களிடையே கொண்டு செல்வதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு உள்ள பாரிய பொறுப்பை ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார். இந்த முறையைப் பொதுமக்களுக்கு மிகவும் வசதியானதாகவும், கவர்ச்சிகரமானதாகவும் மாற்றுவதற்கு வங்கி முறைமை வழங்கக்கூடிய ஒத்துழைப்புகள் குறித்தும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சவால்களைக் களைவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இங்கு கருத்துத் தெரிவித்த மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் ஊடாகப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்வது வங்கி முறைமைக்கு அதிக செலவை ஏற்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார். புதிய QR கொடுக்கல் வாங்கல் முறைக்கு மாறுவதன் மூலம் இச் செலவுகளைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்றும், இது பொதுமக்களுக்கு வினைத்திறனான மற்றும் பாதுகாப்பான வழிமுறையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். வங்கித்துறை சார்பில் கருத்துத் தெரிவித்த இலங்கை வங்கியின் பதில் பொது மேலாளர் வை. ஏ. ஜயதிலக, அரசாங்கத்தின் இந்த முயற்சிக்கு வங்கி முறைமை முழுமையான ஆதரவை வழங்கும் என்றும், டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி நாட்டை இட்டுச் செல்லத் தயார் என்றும் உறுதி அளித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக