கடந்த ஏப்ரல் 3-ஆம் திகதி தென்மேற்கு ஈரானில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்காவின் F-15E Strike Eagle போர் விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த ஆயுத அமைப்பு அதிகாரி (Weapon Systems Officer), ஈரானியப் படைகளின் தேடுதல் வேட்டைக்கு மத்தியில் சனிக்கிழமை இரவு பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார். இந்த மீட்பு நடவடிக்கையின் போது அவர் தனது ரேடியோவில் அனுப்பிய "Power be to God" (அல்லது "God is good") என்ற சுருக்கமான செய்தி, அமெரிக்க அதிகாரிகளிடையே தற்காலிக அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வார்த்தைகள் ஒரு முஸ்லிம் கூறுவதைப் போன்ற தொனியில் இருந்ததால், அது ஈரானின் சதித் திட்டமாக இருக்குமோ என்று வாஷிங்டனில் சந்தேகம் எழுந்தது. பின்னர், அந்த அதிகாரி மிகுந்த மதப்பற்றுடையவர் என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.
7,000 அடி உயரமுள்ள செங்குத்தான மலைச்சரிவுகளில் காயங்களுடன் மறைந்து வாழ்ந்த அந்த வீரர், ஈரானியப் படைகளின் கைகளில் சிக்காமல் இருக்கத் தொடர்ந்து தனது இடத்தை மாற்றிக்கொண்டே இருந்துள்ளார். சுமார் 24 மணிநேரத்திற்கும் மேலாக அவரது இருப்பிடம் தெரியாமல் இருந்த நிலையில், அமெரிக்காவின் சிஐஏ (CIA) தனது சிறப்புத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவரைக் கண்டறிந்தது. இதனையடுத்து, சனிக்கிழமை இரவு ஈரானின் எல்லைக்குள் ஊடுருவிய அமெரிக்கச் சிறப்புப் படை குழுவினர், எவ்வித உயிரிழப்புமின்றி அந்த வீரரைப் பத்திரமாக மீட்டனர். எதிரி நாட்டின் ஆழமான பகுதிக்குள் விழுந்த இரண்டு விமானிகள் தனித்தனியாக மீட்கப்படுவது அமெரிக்க இராணுவ வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக