கொழும்பின் பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பெண் ஒருவர், போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டப்பட்ட பெருந்தொகையான பணத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய நிதி கொடுக்கல் வாங்கல்கள் குறித்து சிஐடியினர் முன்னெடுத்த விரிவான விசாரணைகளை அடுத்து இந்தப் பெண் சிக்கியுள்ளார். சந்தேகநபரான பெண்ணின் பெயரிலுள்ள இரண்டு வங்கிக் கணக்குகளைச் சோதனையிட்டபோது, அவற்றில் மொத்தம் ரூபா 93,762,939 வைப்பிலிடப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
அவரது முதலாவது வங்கிக் கணக்கில் 73,762,939.95 ரூபாயும், இரண்டாவது கணக்கில் 20,000,000 ரூபாயும் வைப்பிலிடப்பட்டிருந்தது. போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுடன் இந்தப் பெண்ணுக்குள்ள தொடர்பு மற்றும் இந்தப் பணத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் (Money Laundering Act) தடுத்து வைக்கப்பட்டுள்ள அவரை, விரைவில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக