யாழ்ப்பாண மாவட்ட கடலட்டைப் பண்ணையாளர்களுக்கும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு நேற்று யாழ். ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில், கடலட்டைப் பண்ணைகளுக்காக அண்மையில் அதிகரிக்கப்பட்டுள்ள குத்தகைக் கட்டணத்தைச் செலுத்துவதில் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் கடும் நிதி நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
சர்வதேச சந்தையில் கடலட்டையின் விலை வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதனைப் பரிசீலிக்காமல் குத்தகைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகப் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டினர். தற்போதைய உலகச் சந்தை விலையை அடிப்படையாகக் கொண்ட புதிய சூத்திரமொன்றின் மூலம் கட்டணத்தை மீளக் கணிப்பிடுமாறும், அதிகரித்த கட்டணத்தைக் குறைக்குமாறும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். பண்ணையாளர்களின் கருத்துகளைக் கேட்டறிந்த அமைச்சரும் ஆளுநரும், தற்போதைய கட்டண மதிப்பீட்டு முறைமை குறித்து விளக்கமளித்ததுடன், இந்தக் கோரிக்கைகளைத் துறைசார் அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக