மத்திய கிழக்கில் ஈரானுக்கும் இஸ்ரேல்-அமெரிக்கா தரப்புக்கும் இடையே தீவிரமடைந்துள்ள போரினால், உலகளாவிய அலுமினிய விநியோகச் சங்கிலி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நேற்று (30.03.2026) லண்டன் உலோகப் பரிவர்த்தனை நிலையத்தில் (LME) அலுமினியத்தின் விலை ஒரே நாளில் 3%க்கும் மேல் உயர்ந்து ஒரு மெட்ரிக் தொன் $3,401 ஆகப் பதிவாகியுள்ளது. பிராந்தியத்தின் மிகப்பெரிய உற்பத்தியாளரான எமிரேட்ஸ் குளோபல் அலுமினியம் (EGA) நிறுவனத்தின் அபுதாபி ஆலை மற்றும் பஹ்ரைன் அலுமினியம் (Alba) நிறுவனத்தின் ஆலைகள் மீதான தாக்குதல்களே இந்த விலை உயர்வுக்கு நேரடி காரணமாக அமைந்துள்ளன.
அபுதாபியில் உள்ள ஆலை கடுமையாகச் சேதமடைந்துள்ளதாக EGA நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், பஹ்ரைன் நிறுவனமும் தனது சேத விபரங்களை மதிப்பிட்டு வருகின்றது. கட்டுமானம், வாகன உற்பத்தி, மின்னணுவியல் மற்றும் பேக்கேஜிங் போன்ற முக்கியத் துறைகளில் அலுமினியம் ஒரு அத்தியாவசிய மூலப்பொருளாக உள்ளதால், இந்த விலை உயர்வு உலகளாவிய ரீதியில் உற்பத்திச் செலவை அதிகரிக்கும் எனப் பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, வாகனங்கள் மற்றும் கட்டுமானப் பொருட்களின் விலையில் இது பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக