மட்டக்களப்பு - குருக்கள்மடம் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழியை அகழ்வு செய்யும் பணிகள், களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி த.பிரதீபன் முன்னிலையில் இன்று திங்கட்கிழமை காலை ஆரம்பமானது. 1990-ஆம் ஆண்டு புனித ஹஜ் யாத்திரை முடிந்து திரும்பிய போது விடுதலைப் புலிகள் அமைப்பினரால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் 167 முஸ்லிம் யாத்திரிகர்கள் இங்கு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இந்த அகழ்வு முன்னெடுக்கப்படுகிறது. ஏற்கனவே 'ரெடார்' (Radar) கருவி மூலம் நிலத்தடியில் அடையாளப்படுத்தப்பட்ட 5 மீட்டர் நீளம் மற்றும் 5 மீட்டர் அகலம் கொண்ட பரப்பளவிலேயே முதற்கட்ட அகழ்வுப் பணிகள் நடைபெறுகின்றன.
இன்றைய அகழ்வுப் பணியின் போது மாலை வரை எதுவித மனித எலும்புக்கூடுகளோ அல்லது தடயப் பொருட்களோ மீட்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகழ்வுப் பணிகள் சுமார் 9 அடி ஆழம் வரை தொடரவுள்ளதுடன், அடுத்த 5 முதல் 7 நாட்களுக்குத் தொடர்ச்சியாக நடைபெறும் எனச் சட்ட வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இப்பணியில் அகழ்வாராய்ச்சித் திணைக்களம், காணாமல் போனோர் அலுவலகம் (OMP), தடயவியல் பொலிஸார் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டுள்ளனர். 2012-இல் ஆரம்பிக்கப்பட்டு நீண்டகாலமாக இழுபறியில் இருந்த இந்த வழக்கு, கடந்த மார்ச் 9-ஆம் திகதி வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவின் பின்னரே இன்றைய அகழ்வு நிலையை எட்டியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக