மீட்டியாகொட பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், பாரிய கொலைச் சதியொன்று முறியடிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழுத் தலைவரின் சகோதரருக்குச் சொந்தமான வீட்டில் தங்கியிருந்த போதே இந்த நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். 22 முதல் 37 வயதுடைய இவர்கள், குறிப்பிட்ட ஒரு நபரைக் கொலை செய்வதற்காகத் திட்டமிட்டு அங்கு தங்கியிருந்ததாகப் பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஜேர்மனியில் தயாரிக்கப்பட்ட நவீன வகை துப்பாக்கி ஒன்றும், அதற்குப் பயன்படுத்தப்படும் ஆறு தோட்டாக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன், இவர்களிடமிருந்து சுமார் 50 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது. இக்கும்பலுக்கும் வெளிநாட்டில் உள்ள பாதாள உலகத் தலைவர்களுக்கும் இடையிலான தொடர்புகள் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேக நபர்களை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக