மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தொடர் கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பான விசாரணையில் மற்றுமொரு முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த 20-ஆம் திகதி நெல்லிக்காட்டு வயல் பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றிலிருந்து 26 வயதுடைய இளம் தாய் உயிருடனும், மற்றொரு பெண் சடலமாகவும் மீட்கப்பட்டனர். இந்த மர்மமான சம்பவங்களின் பின்னணியில் உள்ள கொள்ளைக் கும்பலுக்கு உதவியதாகக் கருதப்படும் நபர் ஒருவர் நேற்று (29.03.2026) ஞாயிற்றுக்கிழமை இரவு கொழும்பு, வத்தளைப் பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே இந்தக் கும்பலைச் சேர்ந்த தம்பதியினர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மறைத்து வைக்கவும், கடத்தல்களுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனங்களை மாற்றவும் உதவிய நபர்கள் குறித்துத் தகவல் வெளியானது. இதன் அடிப்படையில், கிழக்கு மாகாணப் பெருங்குற்றத் தடுப்புப் பிரிவினர் வத்தளையில் பதுங்கியிருந்த இந்தச் சந்தேக நபரைச் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக மட்டக்களப்பிற்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாகப் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக