தபால் திணைக்களத்தின் பெயரில் பொதுமக்களின் வங்கித் தரவுகளைத் திருடும் நோக்கில் திட்டமிட்ட இணைய மோசடிகள் இடம்பெற்று வருவதாகத் தபால் திணைக்களம் அறிவித்துள்ளது. குறிப்பிட்ட ஒரு குழுவினர், வாடிக்கையாளர்களின் கைபேசிகளுக்குக் குறுஞ்செய்திகளை (SMS) அனுப்பி, உங்களுக்கு வந்துள்ள பொதியைப் (Parcel) பெற்றுக்கொள்ள ஆன்லைனில் கட்டணம் செலுத்துமாறு கோருகின்றனர். இதற்காகத் தபால் திணைக்களத்தின் இணையதளத்தைப் போலவே தோற்றமளிக்கும் போலி இணையதள இணைப்புகளை (Links) அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதனை நம்பி ஆன்லைனில் பணம் செலுத்தும் பலரது வங்கிக் கணக்குகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் பணம் திருடப்பட்டுள்ளதாகப் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இச்சம்பவம் குறித்துக் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இவ்வாறான போலி குறுஞ்செய்திகள் மற்றும் கட்டணக் கோரிக்கைகள் குறித்துப் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இதேவேளை, இலங்கையில் தங்கியிருந்து இவ்வாறான பணமோசடிகளில் ஈடுபட்டு வந்த 18 வெளிநாட்டவர்கள் நீர்கொழும்பு பகுதியில் வைத்துப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 16 சீன நாட்டவர்களும், இரண்டு கம்போடிய நாட்டவர்களும் அடங்குவதுடன், அவர்களை எதிர்வரும் ஏப்ரல் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக