அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் எரிபொருள் வளங்கள் மற்றும் அதன் ஏற்றுமதி முனையங்களைக் குறிவைத்துத் தனது அடுத்தகட்ட அதிரடித் திட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். சர்வதேச ஊடகங்களுக்கு அளித்த பேட்டியொன்றில், ஈரானின் எண்ணெயைக் கைப்பற்றுவது தனக்குப் பிடித்தமான ஒரு விடயம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஈரானின் பிரதான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரக்கூடும் எனத் தெரிவித்துள்ளார். ஈரானிடம் போதிய பாதுகாப்பு பலம் இல்லை என்றும், மிக எளிதாக அந்தத் தீவைக் கைப்பற்றிவிட முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்தச் சாத்தியமான நடவடிக்கையை, கடந்த ஜனவரியில் வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட அணுகுமுறையுடன் ட்ரம்ப் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ கடத்தப்பட்டதைத் தொடர்ந்து, அந்நாட்டின் எண்ணெய் தொழிலை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது போல, ஈரானிலும் அத்தகைய ஒரு சூழலை உருவாக்க அவர் விரும்புவதாகத் தெரிகிறது. "நாம் கார்க் தீவைக் கைப்பற்றலாம் அல்லது கைப்பற்றாமலும் போகலாம், ஆனால் நமக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன" எனத் தெரிவித்துள்ள ட்ரம்ப், அமெரிக்காவில் உள்ள சில அரசியல்வாதிகள் தனது இந்த நிலைப்பாட்டை விமர்சிப்பதையும் கடுமையாகச் சாடியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக