மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள தொடர் கொள்ளை மற்றும் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக கிழக்கு மாகாண விசேட குற்ற விசாரணைப் பிரிவினர் அதிரடி விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பெண்களைக் கடத்தி, மயக்க மருந்து கொடுத்து நகைகளைப் பறித்த பின் அவர்களைக் கிணற்றில் வீசிக் கொலை செய்யும் இந்தக் கும்பலைச் சேர்ந்த 37 வயதுடைய முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் நேற்று (26.03.2026) கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டின் நிலத்தடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், மயக்கமடையச் செய்யப் பயன்படுத்தப்படும் விசேட தெளி கருவி (Spray) ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
முன்னதாக, இக்கும்பலைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மற்றும் கொள்ளையிடப்பட்ட நகைகளை வாங்கிய இருவர் என 5 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். வவுணதீவு பகுதியில் உயிருடன் மீட்கப்பட்ட இளம் தாய் வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த விசித்திரமான கொலை வலைப்பின்னல் அம்பலமானது. நேற்று இரவு கொள்ளையர்களின் வீட்டை முற்றுகையிட்ட போது, சத்திர சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் 6 சக்திவாய்ந்த மயக்க மருந்து போத்தல்கள் மற்றும் மாத்திரைகள் நிலத்தடியில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த கொடூர கும்பலின் முழுமையான வலையமைப்பைக் கண்டறிய பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், குறித்த வழக்கு இன்று (27.03.2026) மட்டக்களப்பு நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக