கொழும்பு - கடுவெல பிரதான வீதியில் மாலபே பேருந்து நிலையத்திற்கு முன்பாக நேற்று (26.03.2026) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாலபே பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் கெரகல பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த 24 வயதுடைய திருமணமாகாத இளம் அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். குறித்த அதிகாரி கொழும்பிலிருந்து கடுவெல நோக்கித் தனது மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, மாலபே பேருந்து நிலையத்திற்கு முன்பாகத் தனது கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகிச் சென்றுள்ளார்.
அப்போது, கடுவெலவிலிருந்து கொழும்பு நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் அதிகாரி உடனடியாகத் தலங்கம மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த சமயம் கார் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு மற்றும் விபத்துக்கான மேலதிக காரணங்கள் குறித்து மாலபே பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக