கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் தற்போதைய செயல்பாடுகள் குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழலில் மத்திய வங்கி சுயாதீனமாகச் செயல்படுவது இன்றியமையாதது எனக் குறிப்பிட்ட அவர், தற்போது அந்தச் சுயாதீனத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, நடைமுறையிலுள்ள வருமான வரிச் சட்டமானது மனிதாபிமானமற்ற முறையில் அமைந்துள்ளதாகவும், தன்னிச்சையான மதிப்பீடுகளின் அடிப்படையில் வரி விதிக்கப்படுவதால் மக்களின் மனித உரிமைகள் மீறப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சர்வதேசச் சந்தையுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் எரிபொருள் விலை மிக அதிகமாகக் காணப்படுவதாகத் தெரிவித்த அவர், மின்சாரக் கட்டணங்களும் மீண்டும் உயர்த்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக எச்சரித்துள்ளார். இவ்வாறான தொடர்ச்சியான விலை அதிகரிப்புகள் மக்களின் வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்பதால், மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கான துரித நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரக் கொள்கைகள் வகுக்கப்படும் போது மனிதாபிமான அடிப்படையில் மக்களின் நலன்களைக் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக