மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானின் மையப்பகுதியில் தொடர் தாக்குதல்களை நடத்தி முடித்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை (IDF) தெரிவித்துள்ளது. இது குறித்து வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஈரானின் இராணுவ மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து இந்த "பரந்த அளவிலான" தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஈரானிய ஏவுகணைகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் தரப்பு விளக்கியுள்ளது.
முன்னதாக, இஸ்ரேலை நோக்கி ஈரான் ஏவிய ஏவுகணைகளைத் தங்களது வான் பாதுகாப்பு கட்டமைப்பு அடையாளம் கண்டதாகவும், அந்த அச்சுறுத்தல்களை இடைமறிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் ஐடிஎப் (IDF) தெரிவித்திருந்தது. இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து ஈரானின் வான்பரப்பு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் இடையே முழு அளவிலான போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச சமூகம் இந்த மோதலைத் தணிக்க முயற்சித்து வரும் வேளையில், இஸ்ரேலின் இந்த நேரடித் தாக்குதல் மத்திய கிழக்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக