இலங்கையில் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைச் சட்டத்தின் (ICCPR) 3-ஆம் பிரிவைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்கும் நோக்கில், பொலிஸ்மா அதிபர் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார். இதன்படி, ஒருவரது கருத்து அல்லது உரைக்காக அவரைக் கைது செய்வதற்கு முன்னதாக, அக்கோரிக்கையானது போரைத் தூண்டுகிறதா அல்லது இனம், மதம் மற்றும் தேசிய அடிப்படையில் வன்முறையைத் தூண்டிப் பாகுபாட்டை ஏற்படுத்துகிறதா என்பதைப் பொலிஸார் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். வெறுமனே ஒரு தனிநபருக்கோ அல்லது குழுவிற்கோ ஏற்பட்ட மனவருத்தம் அல்லது மத அவமதிப்பு போன்ற காரணங்கள் மட்டும் இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப் போதுமானதாகக் கருதப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இச்சட்டத்தின் கீழ் ஏதேனும் கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமாயின், சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி சட்டப்பிரிவு இயக்குநரிடம் முன்கூட்டியே எழுத்து மூலமான அனுமதியைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகளை மீறிச் செயல்படும் அல்லது சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தும் விசாரணை அதிகாரிகளுக்கு எதிராகக் கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸ்மா அதிபர் அனைத்து சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுக்கும் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். பேச்சுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக