ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் சர்வதேசக் கப்பல்கள் மற்றும் எரிபொருள் தாங்கிகளிடம் (Oil Tankers) இருந்து கட்டணம் வசூலிப்பதற்கான புதிய சட்டத்தை இயற்றும் பணிகளில் ஈரானிய நாடாளுமன்றம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான முதற்கட்ட வரைவு மசோதா ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாட்டின் சட்டமன்ற சட்டத் துறையினால் இது விரைவில் இறுதி செய்யப்படும் என்றும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மற்றைய போக்குவரத்து வழிகளைப் போலவே, ஒரு நாட்டின் வான்பரப்பு அல்லது கடற்பரப்பைப் பயன்படுத்தும் போது வரி செலுத்தப்படுவது இயல்பானது என ஈரானிய நாடாளுமன்றத்தின் குடிமக்கள் விவகாரக் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நீரிணையின் பாதுகாப்பை ஈரான் உறுதி செய்வதால், அதற்காகக் கப்பல்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்பதே ஈரானின் நிலைப்பாடாகும். தற்போது நிலவும் போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் முன்வைத்துள்ள ஐந்து முக்கிய நிபந்தனைகளில், ஹோர்முஸ் நீரிணையின் மீது ஈரானுக்குள்ள இறையாண்மை மற்றும் கட்டுப்பாட்டு உரிமையை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டும் என்பதும் ஒன்றாகக் காணப்படுகிறது. உலகின் கச்சா எண்ணெய் விநியோகத்தில் மூன்றில் ஒரு பங்கு இந்த நீரிணை வழியாகவே நடைபெறுவதால், ஈரானின் இந்த அதிரடி நகர்வு சர்வதேச எரிபொருள் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக