முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்லவின் மகளும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சமிந்ராணி கிரியெல்ல, ஹந்தானை பகுதியில் 43 ஏக்கர் அரச காணியை சட்டவிரோதமாகக் கையகப்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது எனத் தெரியவந்துள்ளது. கடந்த 2024 ஜூலை 17 ஆம் திகதி பொது நிறுவனங்கள் தொடர்பான குழு (COPE) முன்னிலையில் தான் வழங்கிய அறிக்கை தவறானது என்பதை காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் லியனகே பத்மசிறி உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார். நாடாளுமன்ற ஒழுக்காற்று மற்றும் வரப்பிரசாதங்கள் பற்றிய குழுவின் முன்னிலையில் முன்னிலையான அவர், தனது தவறான அறிக்கையினால் நாடாளுமன்ற உறுப்பினரின் நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்திற்காக நேரடியாக மன்னிப்புக் கோரினார்.
தனது வரப்பிரசாதங்கள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து சமிந்ராணி கிரியெல்ல கடந்த 2025 ஜூலை 22 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் எழுப்பிய முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டது. 2026 ஜனவரி 9 ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போதே முன்னாள் பணிப்பாளர் பத்மசிறி இந்த மன்னிப்பைக் கோரியுள்ளார். நாடாளுமன்றக் குழுக்கள் முன்னிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் வழங்கும் தவறான வாக்குமூலங்கள், மக்கள் பிரதிநிதிகளின் கௌரவத்தைப் பாதிப்பதுடன் பாரதூரமான வரப்பிரசாத மீறலாகக் கருதப்படும் என்பதை இச்சம்பவம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தத் தவறைத் திருத்தி நாடாளுமன்றத்திற்கு முறைப்படி அறிவிக்குமாறு ஒழுக்காற்றுக் குழு COPE குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக