எரிபொருள் விலை அதிகரிப்பின் தாக்கத்தை முன்னிட்டு, விநியோகக் கட்டணங்களை சுமார் 25 சதவீதத்தால் உயர்த்த வேண்டும் என இலங்கை பெட்ரோலிய தனியார் தாங்கிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்கத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்த விவகாரம் குறித்து இன்று (26) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.எச். அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அண்மையில் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளதால், விநியோக நடவடிக்கைகளை மேற்கொள்வதில் உரிமையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூறினார். குறிப்பாக, இந்த மாதத்தில் மட்டும் எரிபொருள் விலை 101 ரூபாயால் உயர்ந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
விநியோகப் பணிகள் தடையின்றி முன்னெடுக்கப்பட்டாலும், நகரங்களுக்கு இடையிலான போக்குவரத்து நடவடிக்கைகளே தற்போது மிகப்பெரிய சவாலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, நகரங்களுக்கு இடையிலான எரிபொருள் விநியோகக் கட்டணத்தை 21ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என சங்க செயற்குழு ஒருமித்த முடிவை எடுத்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கம் தங்களை சிரமத்தில் ஆழ்த்தாது என்ற நம்பிக்கையுடன் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக