ஈரானிய இராணுவ இலக்குகளை குறிவைத்து, யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கி கப்பல் மூலம் வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஈரான் தரப்பில், அமெரிக்கக் கப்பலை குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனால் கப்பல் தனது நிலையை மாற்றியதாகவும் கூறப்பட்ட நிலையில், அமெரிக்கா அதனை முற்றிலும் மறுத்துள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாவது, எந்தவித இடையூறும் இன்றி திட்டமிட்டபடி தாக்குதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கப்பல் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும் கூறினர்.
அமெரிக்க மத்திய கட்டளைப்படை வெளியிட்ட தகவலின்படி, இந்த விமானம் தாங்கி கப்பலில் இருந்து போர் விமானங்கள் தொடர்ந்து புறப்பட்டு, ஈரானிய இராணுவ இலக்குகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஏவுகணைத் தளங்கள் மற்றும் முக்கிய இராணுவ அமைப்புகள் குறிவைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கைகள் மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளன. இந்த தாக்குதல்கள் திட்டமிட்ட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஈரான் தனது கடற்கரைப் பகுதிகளில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதாகக் கூறி, அமெரிக்கக் கப்பல் குழு பின்னுக்கு நகர்த்தப்பட்டதாக வாதிட்டுள்ளது. ஆனால், அமெரிக்க தரப்பு இதனை பொய்யான தகவலாக நிராகரித்துள்ளது.
தற்போதைய சூழ்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் மேலும் அதிகரித்து, மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் பாதுகாப்பு நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக