ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24.03.2026) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா (Masatsugu Asakawa) தலைமையிலான குழுவினருக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெற்றது. இதன்போது, இலங்கைக்கு இந்த ஆண்டு வழங்கத் திட்டமிட்டிருந்த 380 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியொதுக்கீட்டை 480 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க ADB தீர்மானித்துள்ளது. தற்போதைய நெருக்கடியான சூழலைக் கருத்தில் கொண்டு, இதில் 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை உடனடியாக விடுவிக்கவும் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில் இலங்கையைத் தாக்கிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளியினால் ஏற்பட்ட உட்கட்டமைப்புச் சேதங்களைச் சீரமைக்கவும், குறிப்பாக மத்திய மலைநாட்டின் நீர் விநியோகக் கட்டமைப்புக்களைப் பாதுகாக்கவும் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக ADB தலைவர் உறுதியளித்தார். மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியிலும், நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளை அவர் வெகுவாகப் பாராட்டினார். பொருளாதார வளர்ச்சியை எட்டும் அதேவேளை, அனர்த்தங்களுக்குப் பின்னரான மீள்வளர்ச்சித் திட்டங்களுக்கு சர்வதேச ஆதரவைத் திரட்டுவதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக