இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க, நேற்று தனது பிறந்தநாளை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் மிக விமரிசையாகக் கொண்டாடினார். மிக் (MiG) விமானக் கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதி மோசடி மற்றும் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் குற்றச்சாட்டுகளுக்காக முன்னர் டுபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டிருந்த இவர், பின்னர் விசேட குழுவினரால் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். எனினும், அந்த விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியில், விசாரணை அதிகாரிகளின் திடீர் இடமாற்றங்கள் மற்றும் அவருக்குச் சாதகமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தின.
மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினர் என்ற காரணத்தினாலேயே உதயங்க வீரதுங்கவிற்கு இத்தகைய சலுகைகளும் பாதுகாப்பும் கிடைப்பதாகப் பரவலான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. தனது பிறந்தநாள் நிகழ்வின் போது உரையாற்றிய உதயங்க, தனது வாழ்க்கையின் மிக முக்கியமான மூன்று தீர்மானங்களை எடுப்பதற்குத் தனக்குப் பிரதான வழிகாட்டியாகவும் பக்கபலமாகவும் இருந்தவர் மகிந்த ராஜபக்சவே என்று பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான ஒரு சூழலில், போர் பதற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இத்தகைய கொண்டாட்டங்கள் இடம்பெறுவது அரசியல் மட்டத்தில் பல்வேறு விவாதங்களைத் தூண்டியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக