மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில், குவைத் சர்வதேச விமான நிலையம் மீண்டும் ஒருமுறை ட்ரோன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இத்தாக்குதலில் விமான நிலையத்தின் எரிபொருள் தாங்கி ஒன்று இலக்கு வைக்கப்பட்டதில் தீ விபத்து ஏற்பட்டது. சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்லா அல்-ராஜ்ஹி தெரிவிக்கையில், அவசரகால நடைமுறைகள் உடனடியாகச் செயல்படுத்தப்பட்டு, தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் தீ விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிட்டார். இத்தாக்குதலினால் "குறைந்த அளவிலான" சேதங்களே ஏற்பட்டுள்ளதோடு, எவ்வித உயிர்ச் சேதங்களும் பதிவாகவில்லை.
கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரானுக்கும் இஸ்ரேல்-அமெரிக்கா கூட்டுப் படைகளுக்கும் இடையே மோதல் வெடித்ததிலிருந்து, குவைத் விமான நிலையம் தொடர்ச்சியாகத் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றது. கடந்த மார்ச் 8 மற்றும் மார்ச் 14 ஆகிய தேதிகளிலும் ரேடார் அமைப்புகள் மற்றும் எரிபொருள் தொட்டிகள் மீது ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. முன்னதாக பயணிகள் முனையத்தின் மீது நடத்தப்பட்ட ஒரு தாக்குதலில் பலர் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகைய தொடர் அச்சுறுத்தல்கள் காரணமாக வளைகுடா பிராந்தியத்தின் வான்வெளிப் பாதுகாப்பு மற்றும் சர்வதேச விமானப் போக்குவரத்து கடும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக