நாட்டின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில், 2026 யால பருவத்திற்கான உரக் கையிருப்பை தடையின்றி பேணுமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் பதற்ற சூழ்நிலையால் உலகளாவிய விநியோகச் சங்கிலியில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நெல் மற்றும் பிற பயிர்களுக்கு தேவையான உரத்தை தட்டுப்பாடின்றி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
2026 யால பருவத்தில் சுமார் 550,000 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக 125,000 மெட்ரிக் தொன் யூரியா உரம் தேவைப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.
தற்போது சுமார் 68,000 மெட்ரிக் தொன் யூரியா கையிருப்பில் உள்ளதுடன், மேலும் 77,000 மெட்ரிக் தொன் உரத்தை இறக்குமதி செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மேலும், உர இறக்குமதி நிறுவனங்களுக்கு நிலுவையில் உள்ள பணத்தை விரைவாக செலுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறுகிய காலத் தீர்வுகளைத் தாண்டி, எதிர்கால நெருக்கடிகளை சமாளிக்க அரசாங்கம், தனியார் துறை மற்றும் விவசாயிகள் இணைந்து நீண்டகாலத் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய நெல் மற்றும் மரக்கறி போன்ற குறுகிய காலப் பயிர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியது அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக