ஆசிய அபிவிருத்தி வங்கி, இலங்கைக்கு இந்த ஆண்டிற்காக வழங்கத் திட்டமிட்டிருந்த நிதியொதுக்கீட்டை 380 மில்லியன் அமெரிக்க டொலர்களிலிருந்து 480 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தற்போதைய அவசர சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்கவும் சம்மதித்துள்ளது.
இந்த விடயம், ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது வெளிப்படுத்தப்பட்டது. இதில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகாவா தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.
சந்திப்பின் போது, இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை எட்டுவதற்கான ஆதரவு குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன. குறிப்பாக, ‘டிட்வா’ சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களில் இருந்து மீள்வதற்கான அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டுமென ஜனாதிபதி கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த வங்கி, சூறாவளியால் சேதமடைந்த உட்கட்டமைப்புகளை மீளமைப்பதற்கும், எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்களின் தாக்கத்தை குறைக்கும் திட்டங்களுக்கும் தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாக உறுதியளித்தது.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் மோதல் சூழ்நிலைகளுக்கும், இயற்கை அனர்த்தங்களுக்குப் பின்னரும், பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதற்காக இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை வங்கி பாராட்டியுள்ளது.
பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதோடு, நீடித்த பொருளாதார வளர்ச்சியை அடைவதே அரசாங்கத்தின் முக்கிய இலக்காக இருப்பதாக ஜனாதிபதி இந்நேரத்தில் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக