இலங்கை ஆடைத் தொழில்துறை தொடர்ந்து அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகிய சில முக்கிய சந்தைகளையே சார்ந்திருப்பது மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றத்தின் தலைவர் பீலிக்ஸ் ஏ. பெர்னாண்டோ, உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் அதிகரித்து வரும் சூழலில் இந்த எச்சரிக்கையை முன்வைத்துள்ளார்.
தற்போது இலங்கைப் பெறும் ஆடை ஏற்றுமதி வருமானம் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ஆகியவற்றிற்கிடையில் குறிப்பிடத்தக்க இடைவெளி காணப்படுகிறது. 2025 ஆம் ஆண்டிற்கான தரவுகளின்படி, ஆடை ஏற்றுமதி வருமானம் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை சற்றே கடந்துள்ளது.
இது ஒரு சாதகமான முன்னேற்றமாக இருந்தாலும், 8 பில்லியன் அமெரிக்க டொலர் ஏற்றுமதி இலக்கை அடைய இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இந்த இலக்கு வெறும் அறிவிப்பாக இல்லாமல், தேசிய அளவிலான செயல் திட்டமாக மாற்றப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்த ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 85 சதவீதத்திற்கும் அதிகமான பகுதி அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகிய மூன்று சந்தைகளிலிருந்தே கிடைக்கிறது.
இந்த சந்தைகளில் நுகர்வோர் தேவையில் ஏற்படும் குறைவு, சுங்க வரி கொள்கைகளில் மாற்றம், கடுமையான விதிமுறைகள் அல்லது வர்த்தக நடைமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை நேரடியாக இலங்கையின் முழு ஆடைத் துறையையும் பாதிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, தற்போதைய சந்தைகளை மட்டும் சார்ந்து இருப்பதை விட, புதிய மற்றும் வளர்ந்து வரும் சர்வதேச சந்தைகளை இலக்கு வைத்து வலுவான ஏற்றுமதி அடித்தளத்தை உருவாக்குவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக