அரசாங்க நிறுவனங்களில் எரிபொருள் மற்றும் வலுசக்தியை சிக்கனமாக பயன்படுத்துவதற்காக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகத்தினால் புதிய வழிகாட்டல் ஆலோசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்ச் சூழ்நிலையால் எதிர்காலத்தில் நாட்டிற்கு எரிபொருள் இறக்குமதியில் சிக்கல்கள் ஏற்படக்கூடும் என்பதால், தற்போதுள்ள கையிருப்புகளை பாதுகாப்பாக பயன்படுத்தவும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டல்கள் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மற்றும் அரசியலமைப்புச் சார்ந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதில், பணியாளர்கள் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதை குறைத்து பொதுப் போக்குவரத்து அல்லது குழு போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும், தேவையற்ற வாகனப் பயன்பாட்டை கட்டுப்படுத்த தினசரி திட்டமிடல் அவசியம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்சார சேமிப்பிற்காக இயற்கை வெளிச்சத்தை அதிகம் பயன்படுத்தவும், குளிரூட்டிகளுக்குப் பதிலாக மின்விசிறிகளை பயன்படுத்தவும் கூறப்பட்டுள்ளது. மேலும், மின்தூக்கி பயன்பாட்டை குறைத்து படிகளை பயன்படுத்தவும், தேவையற்ற நேரங்களில் மின்விளக்குகளை அணைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுடன், பாதுகாப்பு அவசியமில்லாத வீதிகளில் தற்காலிகமாக மின்விளக்குகளை அணைப்பதற்கும், பகல் நேரங்களில் நிறுவனங்களில் தொலைக்காட்சி பயன்பாட்டை தவிர்ப்பதற்கும் நடவடிக்கைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப வசதிகள் உள்ள இடங்களில், பணியாளர்களை அலுவலகத்திற்கு வரவழைக்காமல் இணையத்தின் மூலம் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், பணிநேரத்திற்கு அப்பாலும் வார இறுதி நாட்களிலும் அத்தியாவசிய தேவைகளைத் தவிர அலுவலகங்களை மூடி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடமும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், நாட்டின் வலுசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கமும் பொதுமக்களும் இணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என இந்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக