இலங்கையில் நிலவும் தற்போதைய எரிபொருள் கையிருப்பு மற்றும் விநியோக நடைமுறைகள் குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருண ஊடகங்களிடம் விளக்கமளித்துள்ளார். மத்திய கிழக்கு போர்ச் சூழலால் மக்கள் மத்தியில் ஏற்பட்ட தேவையற்ற பீதி காரணமாக, கடந்த சில நாட்களில் எரிபொருள் நுகர்வு திடீரென 20% அதிகரித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது நாட்களில் மட்டும் இரண்டு கப்பல் சுமைகளுக்குச் சமமான 57,000 மெட்ரிக் டொன் டீசல் மற்றும் 47,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டுள்ளது. இத்தகைய அசாதாரண நுகர்வைக் கட்டுப்படுத்தவும், எரிபொருள் கடத்தலைத் தவிர்க்கவுமே க்யூ.ஆர் (QR) முறை மீண்டும் அவசரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் தினசரி டீசல் நுகர்வு 4,800 மெட்ரிக் டொன்களாகவும், பெட்ரோல் நுகர்வு 4,045 மெட்ரிக் டொன்களாகவும் காணப்படுகிறது. கியூஆர் முறையினூடாக நாட்டின் மொத்த எரிபொருள் நுகர்வை 20% வரை குறைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மாதத்திற்குத் தேவையான எண்ணெய் இருப்பு நம்மிடம் உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற அச்சமடைய வேண்டாம் எனவும், தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து ஒத்துழைப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும், சனிக்கிழமை நள்ளிரவுடன் ஒரு வாரத்திற்கான ஒதுக்கீடு முடிவடைந்து, ஞாயிற்றுக்கிழமை புதிய வாரத்திற்கான எரிபொருள் ஒதுக்கீடு தானாகவே புதுப்பிக்கப்படும் (Reset) எனவும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக