நாட்டில் நிலவும் கடுமையான எரிபொருள் நெருக்கடி குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (17.03.2026) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இந்தத் தகவலை வெளியிட்டார். தற்போது வரை ஒரு மணிநேரம் கூட மின்வெட்டு செய்யாமல் நிலைமையை அரசாங்கம் வெற்றிகரமாக நிர்வகித்து வருவதாகக் குறிப்பிட்ட அமைச்சர், எனினும் எரிபொருள் விநியோகத்தில் நிலவும் சவால்களைக் கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மின்சாரத்தைத் துண்டிக்கும் சூழல் உருவாகலாம் என எச்சரித்துள்ளார்.
மத்திய கிழக்கு போர்ச் சூழலால் எரிபொருள் இறக்குமதியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் மற்றும் மின் உற்பத்திக்கான செலவீனம் அதிகரித்துள்ள நிலையில், மின் விநியோகத்தைப் பராமரிப்பது சவாலாக மாறியுள்ளது. தற்போதைக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவில்லை என்றாலும், வரவிருக்கும் வாரங்களில் நிலமையை மீளாய்வு செய்து மின்சாரத் துண்டிப்பு குறித்து முடிவெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். இதனால் பொதுமக்கள் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமெனவும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக