பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரண சந்தை மற்றும் பேலியகொட பகுதிகளில், மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத விபச்சார விடுதிகள் இயங்கி வருவதாகப் பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் நேற்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, இரண்டு விடுதிகள் முற்றுகையிடப்பட்டன. இந்த நடவடிக்கையில், விடுதிகளை நிர்வகித்ததாகக் கூறப்படும் களனி பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஆண் ஒருவரும், ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 24 முதல் 39 வயதுக்குட்பட்ட 8 பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் லுணுகலை, மொரட்டுவ, தல்பே, முல்லெடியாவ, தெஹிகல்பிட்டிய, நாமல்கமுவ மற்றும் கல்நேவ ஆகிய வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அண்மைக்காலமாக கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் இவ்வாறான போலி மசாஜ் நிலையங்கள் அதிகரித்து வரும் நிலையில், பேலியகொட பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக