இலங்கை கடற்பரப்பில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தாக்குதலில் உயிரிழந்த ஈரானிய மாலுமிகளின் மரணத்திற்கு பழிவாங்கப்படும் என ஈரான் கடற்படைத் தளபதி ஷஹ்ராம் இரானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த மார்ச் 4ஆம் திகதி, ‘IRIS Dena’ என்ற ஈரானிய கடற்படை கப்பல் இந்தியக் கடற்படையுடன் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுவிட்டு ஈரான் நோக்கி திரும்பிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்தக் கப்பல், இலங்கை காலி கடற்பரப்பை அண்மித்த சர்வதேச கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய டொர்பிடோ தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் குறைந்தது 87 ஈரானிய மாலுமிகள் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் மீட்கப்பட்டதாகவும் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த ஷஹ்ராம் இரானி, இந்தியப் பெருங்கடலில் இலங்கை கடற்பரப்பை அண்மித்த பகுதியில் கொல்லப்பட்ட ஈரானிய மாலுமிகளின் மரணத்திற்கு பின்னால் உள்ளவர்கள் கடுமையான பதிலடி தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என எச்சரித்தார்.
மேலும், “எமது தியாகிகளின் இரத்தத்திற்குப் பழிவாங்குவோம்; எதிரி எதிர்பார்க்காத இடத்திலிருந்து தாக்குதல் நடத்தப்படும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக