நாட்டில் நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை முன்னிட்டு, அனைத்து அரச பாடசாலைகளுக்கும் ஒவ்வொரு புதன்கிழமையும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கும் வாரம் ஒருநாள் விடுமுறை வழங்க அரசாங்கம் எடுத்த முடிவைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டின் தற்போதைய சவால்களை சமாளிக்கும் வகையில் எரிசக்தி முகாமைத்துவத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுப்பதற்கான அவசர நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
அந்த தீர்மானங்களின் அடிப்படையில், இன்று முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு புதன்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்படும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறை பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் நீதித்துறைக்கும் பொருந்தும். எனினும், சுகாதாரம், துறைமுகம், நீர் வழங்கல் மற்றும் சுங்கம் போன்ற அத்தியாவசிய சேவைகள் இதற்கு உட்படாது.
மேலும், நாட்டின் தற்போதைய நிலையை மதிப்பீடு செய்து எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுக்க அமைச்சரவையால் 4 பிரதான குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக