எரிபொருள் விநியோகத்தில் QR முறைமை அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பேக்கரி உரிமையாளர்கள் கடுமையான சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பேக்கரி உற்பத்திக்காக கேன்களில் எரிபொருள் பெறுவதற்கு பொருத்தமான QR குறியீட்டு முறைமை இல்லாததே இந்த பிரச்சினைக்கு காரணமாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
பேக்கரி துறையில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான அடுப்புகள் டீசல் மூலமே இயங்குவதால், எரிபொருள் இல்லாமை நேரடியாக உற்பத்தியை பாதிக்கிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனைய துறைகளுக்கு எரிபொருள் பெற்றுக்கொள்ள அரசாங்கம் விசேட ஏற்பாடுகளை செய்துள்ள போதிலும், பேக்கரி உரிமையாளர்கள் குறித்து போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்பதும் அவர் முன்வைத்த குற்றச்சாட்டாகும்.
இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்கப்படாவிட்டால், சந்தையில் பேக்கரி பொருட்களின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அதன் தாக்கத்தை பொதுமக்களே எதிர்கொள்ள நேரிடும் எனவும் என். கே. ஜயவர்தன எச்சரித்துள்ளார்.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் வர்த்தக, வணிக, கூட்டுறவு மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்கவிடம் கருத்து பெற ஊடகங்கள் பலமுறை முயற்சி செய்தபோதிலும், அது வெற்றியளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக