மத்திய கிழக்கில் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழல் காரணமாக, இலங்கை மீண்டும் ஒரு பாரிய பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், தற்போதைய அரசு இந்த நிலைமையை சரியாக கையாளத் தவறினால் அதன் பாதிப்பு முழுமையாக பொதுமக்கள் மீது விழும் என அவர் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பொருளாதார அழுத்தங்கள் மற்றும் மின்சாரம், எரிசக்தி விநியோகத்தில் பலவீனங்கள் காணப்படும் நிலையில், சர்வதேச சந்தை மாற்றங்கள் இலங்கைக்கு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எண்ணெய் விலை உயர்வு அபாயம்
ஹோர்முஸ் நீரிணை போன்ற முக்கிய கடல் மார்க்கங்கள் முடக்கப்படக்கூடிய அபாயம் காரணமாக உலகளவில் எண்ணெய் விலைகள் உயர்ந்து வருகின்றன. இதன் நேரடி தாக்கம் இலங்கையின் உள்நாட்டு எரிபொருள் விலைகளில் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வெளிநாட்டு எரிசக்தி உட்கட்டமைப்புகள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள், இலங்கைக்கு தேவையான எரிபொருள் மற்றும் மூலப்பொருள் இறக்குமதியை பாதிக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கு எச்சரிக்கை
இந்த நிலைமையை எதிர்கொள்ள அரசு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், நிர்வாகத் தவறுகள் ஏற்பட்டால் நாடு மீண்டும் மனிதாபிமான மற்றும் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்க நேரிடும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
போர் தற்போது இராணுவ இலக்குகளைத் தாண்டி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கடல் போக்குவரத்து பாதைகளை நோக்கி நகர்ந்து வருவது கவலைக்குரியதாகும். இது இலங்கை போன்ற நுகர்வு நாடுகளின் வாழ்வாதாரத்தை நேரடியாக பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக