மத்திய கிழக்கின் போர்ச் சூழலால் எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், நாட்டில் மின்சார உற்பத்தி பாதிக்கப்படுமா என்ற கவலை மக்களிடையே எழுந்துள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சின் அதிகாரி, மின்சார உற்பத்தியைப் பராமரிக்கத் தேவையான எரிபொருள் இருப்பு தற்போது நாட்டில் போதுமான அளவு உள்ளதால் மின்வெட்டு விதிக்கப்படாது எனத் தெரிவித்துள்ளார். வெப்ப மின் உற்பத்திக்கான டீசல் மற்றும் உலை எண்ணெய் (Furnace Oil) விநியோகத்தை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தடையின்றி வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நீர்மின் உற்பத்திக்கும் நீர்த்தேக்கங்களில் தற்போதைக்கு போதுமான நீர் கொள்ளளவு இருப்பதாகவும், சிறந்த சூரிய ஒளி காரணமாக தேசிய மின்கட்டமைப்பிற்கு சூரிய சக்தி மூலம் வலுவான பங்களிப்பு கிடைத்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இருப்பினும், எதிர்காலத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைவீழ்ச்சி குறைந்தால் நீர்மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார். எரிபொருள் விலை அதிகரிப்பைக் காரணம் காட்டி மின்வெட்டு ஏற்படும் என்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என இதன்போது பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக