மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் தனது நிலத்தடி இராணுவ வளாகமான "ஏவுகணை நகரத்தின்" காட்சிகளை வெளியிட்டு உலக நாடுகளை அதிரவைத்துள்ளது. ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்தைக் கட்டுப்படுத்தவும், தேவைப்பட்டால் தடுக்கவும் பெரிய அளவிலான தற்கொலைப்படை ட்ரோன் படகுகளை (Suicide Drone Boats) தயார் நிலையில் வைத்துள்ளதாக ஈரான் இராணுவம் தெரிவித்துள்ளது. நீரின் மேற்பரப்பிலோ அல்லது அதற்குச் சற்று அடியிலோ சென்று இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கி வெடிக்கச் செய்யும் வகையில் இந்த ஆளில்லாப் படகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. உக்ரைன் - ரஷ்யா போர் மற்றும் செங்கடலில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கையாண்ட அதே போர் உத்தியை தற்போது ஈரானும் கையில் எடுத்துள்ளது.
உலகளாவிய மசகு எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் அச்சுறுத்தலுக்குப் பதிலடியாக, இந்த நீரிணையை மூடுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது. இவ்வாறு போக்குவரத்து முடக்கப்பட்டால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 200 டொலரை எட்டும் என ஈரான் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். ஈரான் அரசுத் தொலைக்காட்சி வெளியிட்டுள்ள வீடியோவில் நீண்ட சுரங்கப்பாதைகள் முழுவதும் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் கடல் கண்ணிவெடிகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால், உலகளாவிய எரிசக்தி பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக