யாழ். மாவட்டத்தின் தற்போதைய எரிபொருள் விநியோகம் மற்றும் சவால்கள் குறித்து ஆராயும் விசேட கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில், அத்தியாவசிய சேவைகளைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வது குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, தீவகப் பகுதி மக்கள் டிஜிட்டல் குறியீட்டு முறையை (QR Code) பயன்படுத்துவதில் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் நீண்ட தூரப் போக்குவரத்துப் பாரஊர்திகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் கடற்றொழில் போன்ற முக்கிய துறைகளின் எரிபொருள் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்யத் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒழுங்கைப் பேண பொலிஸ் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும், நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் பொதுமக்களுக்கான அடிப்படைத் தேவைகளை அந்தந்தப் பிரதேச செயலாளர்கள் ஊடாகக் கவனிப்பதற்கும் அமைச்சரால் அறிவுறுத்தப்பட்டது. எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதற்கான புதிய பொறிமுறைகளை உருவாக்குவதன் மூலம், எதிர்வரும் வாரங்களில் ஏற்படக்கூடிய நெருக்கடிகளைக் குறைக்க முடியும் என இக்கூட்டத்தில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக