இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்து கொள்ளையிட்டு வந்த தனது மகனுக்கு உடந்தையாக இருந்த 53 வயதுடைய தாய் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை அடகு வைத்து, அந்தப் பணத்தை தனது மகனின் போதைப்பொருள் பாவனைக்கு வழங்கிய குற்றச்சாட்டின் கீழ் இந்த தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
வென்னப்புவ தலைமையக பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த 13ஆம் திகதி வடக்கு களுத்துறை பகுதியில் வைத்து குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்க நகைகள் கொள்ளை
சந்தேகநபரான இளைஞன் மோட்டார் சைக்கிளில் பயணித்து வீதியில் செல்லும் பெண்களின் தங்கச் சங்கிலிகளை அறுத்து கொள்ளையிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் வென்னப்புவ தம்பரவில பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற 18 வயதுடைய பல்கலைக்கழக மாணவி ஒருவரின் தங்கச் சங்கிலியை அறுக்க முயன்றபோது அங்கிருந்த இளைஞர் ஒருவர் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதன்போது சந்தேகநபரான இளைஞனிடம் இருந்து 16 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் அவர் ஏற்கனவே சங்கிலி அறுப்பு சம்பவங்களுக்காக விளக்கமறியலில் இருந்து அண்மையில் பிணையில் விடுதலையானவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பொலிஸார் விசாரணை
கைது செய்யப்பட்ட இளைஞனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளையடிக்கும் தங்கச் சங்கிலிகளை தனது தாயிடம் ஒப்படைப்பதாகவும், தாய் அவற்றை அடகு வைத்து பெறப்படும் பணத்தை தனது போதைப்பொருள் தேவைக்காக வழங்குவதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனையடுத்து தாயிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மகன் கொண்டு வந்த நகைகள் அடகு வைக்கப்பட்ட ஐந்து இடங்கள் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன.
இதன்படி அடகு வைக்கப்பட்ட சுமார் 10 தங்கச் சங்கிலிகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
தற்போது தடுப்புக் காவலில் உள்ள சந்தேகநபரான இளைஞனிடம் மேலதிக விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக