கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து எந்தவிதமான கையொப்பங்களையும் பெறுவதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை என மாவட்ட அரச அதிபரும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளரும் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் கீழ் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளையும், குளத்திற்கு அப்பால் மானாவாரி செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளையும் இலக்கு வைத்து கையொப்பங்கள் பெறப்படுகின்றன என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, கோரக்கன்கட்டு, சின்னக்காடு மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் உள்ள இடதுகரை மற்றும் வலதுகரை விவசாயிகளிடமிருந்து சிறுபோக பயிர்ச்செய்கை தொடர்பான பதிவுகளுக்காக கமக்கார அமைப்புகள் மூலம் வெற்று படிவங்களில் கட்டாயப்படுத்தி கையொப்பங்கள் பெறப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த படிவங்களில் கடிதத் தலைப்பு, உள்ளடக்கம் அல்லது உத்தியோகபூர்வ கையொப்பம் எதுவும் இல்லாமல் சில அமைப்புகள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பாக மாவட்ட அரச அதிபர் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் பிரதி ஆணையாளரிடம் விசாரிக்கப்பட்ட போது, விவசாயிகளிடமிருந்து இவ்வாறான கையொப்பங்களை பெறுவதற்கான எந்த அறிவுறுத்தல்களும் தங்களால் வழங்கப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக ஏதேனும் குறைகள் இருப்பின் விவசாயிகள் நேரடியாக தங்களிடம் முறைப்பாடு செய்யலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை, இந்த நடவடிக்கை சில அரசியல் நோக்கங்களுக்காகவும், தனிப்பட்ட காணி தொடர்பான பிரச்சினைகளை மறைக்கவும் ஒரு பிரதேச சபை உறுப்பினரின் தலைமையில் மேற்கொள்ளப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக