அண்மைய நாட்களில் நாட்டில் நிலவி வரும் கடுமையான வெப்பநிலை பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கையை பேராதனை போதனா வைத்தியசாலையின் மருத்துவ நிபுணர் பேராசிரியர் உதய ரலபனாவ வெளியிட்டுள்ளார்.
அவரின் அறிவுறுத்தலின்படி, பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி அனைத்து மக்களும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நேரடியாக சூரிய ஒளிக்கு உட்படுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்ற தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் எந்த வயதினருக்கும் தலைச்சுற்றல், தசை பிடிப்பு, வாந்தி, அதிக களைப்பு அல்லது மயக்கம் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதேபோல், அனைவரும் அதிகளவில் தண்ணீர் பருகுவதோடு, உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்ள வேண்டும் என பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக