கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளான மிரிஹான, மஹரகம, தெஹிவளை மற்றும் கல்கிஸ்ஸை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில், வீட்டு வேலைக்காக அமர்த்தப்படும் நபர்களால் தங்கம் மற்றும் பணம் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலைமை தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் இருந்து பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
பொலிஸாரின் தகவலின்படி, சில நபர்கள் திட்டமிட்ட முறையில் வசதி படைத்த வீடுகளை இலக்கு வைத்து, தமது குடும்ப உறுப்பினர்களையும் சம்பந்தப்படுத்தி திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் முதலில் குறுகிய காலத்திலேயே வீட்டு உரிமையாளர்களின் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு பின்னர் தங்கம், பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர்க்க பொதுமக்கள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
வேலைக்கு அமர்த்தப்படும் நபரின் தேசிய அடையாள அட்டையின் தெளிவான நிழற்படப் பிரதியை பெற்றுக்கொண்டு அதன் அசல் ஆவணத்துடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும், அந்த நபரின் நிரந்தர மற்றும் தற்காலிக வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலிருந்து பெறப்பட்ட நற்சான்றிதழ் அல்லது பொலிஸ் அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு கோர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பணியாளரின் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் அவசர காலங்களில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்களையும் முன்கூட்டியே பெற்றுக்கொள்ள வேண்டும்.
வீட்டில் உள்ள தங்கம், பணம் மற்றும் பெறுமதியான ஆவணங்களை எப்போதும் பாதுகாப்பான இடங்களில் வைத்திருக்க வேண்டும் என்றும், வீட்டுப் பணியாளர்களை வீட்டில் தனியாக விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், வேலைக்கு அமர்த்தப்படும் பணியாளர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணங்களின் பிரதிகளை சம்பந்தப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் ஒப்படைக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் பணம் மற்றும் சொத்து இழப்புகளைத் தவிர்க்க முடியும் என இலங்கை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக