யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி தொடர்பான வழக்கு நேற்று (12) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை எதிர்வரும் ஏப்ரல் 20ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, புதைகுழியை சுற்றியுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு நல்லூர் பிரதேச சபைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அகழ்வு பணிகளில் ஈடுபடுவோருக்கும் பொருட்களை வைப்பதற்காகவும் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகள் கடந்த டித்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த பருவமழை காரணமாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் அவற்றை அகற்றி புதிய கொட்டகைகளை அமைக்கவும், அகழ்வு பணிகளுக்குத் தேவையான தளபாட வசதிகளை முன்புபோல் நல்லூர் பிரதேச சபை ஏற்பாடு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், புதைகுழி பகுதியில் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நீதவான் எஸ். லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ். பிரணவன், சட்டத்தரணிகள் நிரஞ்சன் மற்றும் ரணித்தா உள்ளிட்டோர், நல்லூர் பிரதேச சபை செயலாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
அந்த நேரத்தில் புதைகுழி பகுதியில் இன்னும் நீர் தேங்கி இருப்பது கவனிக்கப்பட்டதால், எதிர்வரும் மார்ச் 28ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் கண்காணிப்பில் அந்த நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும், இந்த வழக்கு ஏப்ரல் 08ஆம் திகதி மீண்டும் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதுடன், அதன் பின்னர் ஏப்ரல் 20ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக